search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாமிரபரணி மகா புஷ்கர விழா"

    தாமிரபரணியில் புஷ்கர விழாவுக்காக நீராட வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் அனைத்து இடங்களிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள். #ThamirabaraniPushkaram
    நெல்லை:

    144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடக் கூடிய தாமிரபரணி மகா புஷ்கர விழா இந்த ஆண்டு கடந்த 11-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. பல்வேறு ஆன்மீக அமைப்புகள், பொதுமக்கள் சார்பாக தாமிரபரணியில் பாபநாசம் தொடங்கி புன்னக்காயல் வரை 64 தீர்த்தக்கட்டங்களிலும் இந்த விழா நடக்கிறது. இதில் நாடுமுழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆற்றில் புனித நீராடி வருகிறார்கள்.

    புஷ்கர விழாவின் 5-வது நாளான இன்று அதிகாலையிலேயே ஆற்றில் பக்தர்கள் குவிந்தனர். ஆற்றில் புனித நீராடி வழிபாடு செய்தனர். பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் அங்குள்ள இந்திர கீல தீர்த்தம், திரி நதி சங்கம தீர்த்தம், அகஸ்தியர் அருவி போன்ற இடங்களில் புனித நீராடினர்.

    இதேபோல் அம்பை, கல்லிடைகுறிச்சி, அத்தாள நல்லூர், சேரன்மகாதேவி, திருப்புடைமருதூர், முக்கூடல், கோடகநல்லூர், பழவூர், நெல்லை குறுக்குத் துறை, தைப்பூச மண்டபம், வண்ணார்பேட்டை, அருகன்குளம், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர் படித்துறைகளிலும் இன்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் ஆற்றில் புனித நீராடி வழிபாடு செய்தனர்.

    அகில பாரதிய துறவியர்கள் சங்கம் சார்பாக பாபநாசத்தில் நடந்து வரும் புஷ்கர விழாவில் இன்று காலை கணபதி ஹோமம் நடைபெற்றது. இதையடுத்து தாமிரபரணியில் சுவாமி ஐயப்பனுக்கு நீராட்டு நடைபெற்றது. இதை தொடர்ந்து அங்குள்ள சேனைத்தலைவர் திருமண மண்டபத்தில் ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடைபெற்றது.

    இதேபோல் சித்தர்கள் கோட்டம் சார்பாக பாபநாசம் திரிநதி சங்கம தீர்த்தத்தில் இன்று காலை சிறப்பு வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து ஆற்றில் வழிபாடுகள் நடந்தன. காஞ்சி சங்கரமடம் சார்பாக திருப்புடை மருதூரில் நடைபெற்ற புஷ்கர விழாவில் இன்று காலை மிருத்யுஞ்சய ஹோமம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

    நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவில் படித்துறையில் இன்று காலை சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. தொடர்ந்து தேவார இன்னிசை, வேதபாராயணம் நடைபெற்றது. நெல்லை தைப்பூச மண்டபம் முன்புள்ள படித்துறையில் இன்று காலை ராஜமாதங்கி ஹோமம் நடந்தது. தொடர்ந்து தாமிரபரணியில் வழிபாடுகள் நடந்தன. சங்கீத சபாவில் பன்னிரு திருமுறை பாராயணம் நடந்தது.

    அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் இன்று காலை சிறப்பு ஹோமம் நடந்தது. 50-க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் கலந்துகொண்டு ஹோமம் நடத்தி தாமிரபரணிக்கு வழிபாடு செய்தனர்.

    தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கைலாசநாதர் கோவில் படித்துறையில் இன்று நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்றும் இந்த படித்துறையில் வழக்கத்தை விட அதிக கூட்டம் காணப்பட்டது. ஆண்களும், பெண்களும் ஏராளமானோர் படித்துறையில் புனித நீராடி குரு ஸ்தலமான கைலாசநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்கள்.

    ஸ்ரீவைகுண்டம் படித்துறையில் இன்று காலை கண் திருஷ்டி, பயம், தொல்லைகள், வம்பு வழக்குகள் மற்றும் சாபங்களை நீக்கும் ஸ்ரீமகா சுதர்சன ஹோமங்கள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தாமிரபரணியில் புனித நீராடி வழிபட்டனர்.

    புஷ்கர விழா நடந்துவரும் அனைத்து இடங்களிலும் பக்தர்கள் பாதுகாப்புக்காக ஆற்றில் தீயணைப்பு மற்றும் நீச்சல் வீரர்கள் ரப்பர் படகுகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளனர். படித்துறைகளில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள். #ThamirabaraniPushkaram
    144 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த படித்துறையில் தீர்த்தவாரியுடன் விழா தொடங்கியது. #ThamirabaraniMahaPushkaram
    பாபநாசம்:

    குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதிக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணி ஆற்றுக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது.

    இந்த புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய மகாபுஷ்கர விழா என்பதால் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நெல்லை அருகன் குளம் ஜடாயு தீர்த்தம், செப்பறை கோவில், மணி மூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில் படித்துறைகள் முற்றிலும் புதுப்பித்து கட்டப்பட்டன. தூத்துக்குடியில் முறப்பநாடு தலத்தில் படித்துறைகள் சீரமைக்கப்பட்டது. மேலும் பல்வேறு படித்துறைகள் புதுப்பிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு புஷ்கர விழாவிற்கு தயார்படுத்தப்பட்டன.

    இதையடுத்து மகா புஷ்கர விழா இன்று காலை தொடங்கியது. நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த படித்துறையில் தீர்த்தவாரியுடன் மகா புஷ்கர விழா தொடங்கியது. விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, தாமிரபரணி நதியை வணங்கி புனித நீராடி மகிழ்ந்தனர்.



    நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகி பங்கேற்க உள்ளார். பின்பு அங்குள்ள படித்துறையில் புனித நீராடும் கவர்னர் பாபநாசம் சேனைத்தலைவர் சமுதாய கூடத்தில் நடக்கும் தாமிரபரணி புஷ்கர துறவிகள் மாநாட்டிலும் பங்கேற்கிறார்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 143 படித்துறைகளில் புஷ்கர விழா பூஜைகள் நடைபெறுகின்றன.

    மாலை 5.15 மணிக்கு நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த பகுதியில் நடைபெறும் புஷ்கர விழாவில் கவர்னர் கலந்துகொண்டு தாமிர பரணிக்கு ஆரத்தி பூஜையை தொடங்கி வைக்கிறார். இதற்காக தீர்த்த கட்டத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நதிக் கரையில் 144 அடியில் படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. .

    ஆரத்தி பூஜையின்போது காசியில் கங்கைக்கு நடப்பது போன்று மகாபரணி ஆரத்தி செய்யப்படுகிறது. இதற்காக காசியில் இருந்து 7 சிறப்பு ஆரத்தி தட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. சிறப்பு வேத பண்டிதர்களும் வந்துள்ளனர். படித்துறையில் 7 அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி மாவட்டத்தில் பக்தர்கள் நீராடுவதற்காக 29 படித்துறைகள் கண்டறியப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    மகா புஷ்கர விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு பயிற்சி பெற்ற 90 போலீசார் அடங்கிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் கமாண்டோ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மீட்பு பணிக்காக  படகுகளும் தயார் நிலையில் உள்ளன. 22-ம் தேதி வரை புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.  #ThamirabaraniMahaPushkaram
    ×